சென்னை உயர் நீதிமன்றத்தில் பிகில் பட கதை வழக்கு!
விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் குறும்பட இயக்குநர் செல்வா தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு கால்பந்து மகளிர் அணி மற்றும் அதன் பயிற்சியாளரை மையமாகக் கொண்டும், மகளிர் அணி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் முன் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்தும் கல்கி என்ற கதையை கடந்த 2017-ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன். இந்த நிலையில், அந்த கதையைத் தழுவி இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யை வைத்து தளபதி 63 என்ற படத்தை எடுத்து வருகிறார். இதுதொடர்பாக திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். ஆனால் உறுப்பினராகி 6 மாதங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கதை திருட்டு தொடர்பாக விசாரிக்க முடியும் எனக் கூறி எனது புகாரை நிராகரித்து விட்டனர். எனவே, தளபதி 63 படத்தின் கதையை என்னுடையது என அறிவிக்க வேண்டும். இந்த திரைப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
பிறகு, இந்த வழக்கு காப்புரிமை தொடர்பானது என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக தன்னுடைய வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் செல்வா. இதனால் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வாவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Advertisement
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் செல்வா. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அட்லி சார்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால், வழக்கு நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.