ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என அந்நிகழ்ச்சி நடைபெற்ற தாம்பரம் தனியார் கல்லூரியிடம் உயர் கல்வித்துறை விளக்கம் கோரியுள்ளது. எந்த அடிப்படையில் திரைப்பட நிகழ்வுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் பிகில் படமும் தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், விளம்பரப் பலகை விவகாரம் தொடர்பாக விஜய் கூறியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிகில் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சி தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கோயம்புத்தூர் கறிக்கடை உரிமையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தியுள்ளார்கள். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.