மேலும் தள்ளிப் போகும் விஜய், சூர்யா படங்களின் வெளியீடு: மே 3 வரை திரையரங்குகள் இயங்கத் தடை!
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மே 3 வரை திரையரங்குகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மே 3 வரை திரையரங்குகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த தேசிய ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதனால் தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, மே 3 வரை திரையரங்குகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப் போற்று, தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், ஜெயம் ரவி நடித்த பூமி உள்ளிட்ட படங்களின் வெளியீடு மேலும் தள்ளிவைக்கப்படுகிறது.