எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம்: பாடகி சைலஜா தகவல்
பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாடகியும் அவருடைய சகோதரியுமான எஸ்.பி. சைலஜா கூறியுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாடகியும் அவருடைய சகோதரியுமான எஸ்.பி. சைலஜா கூறியுள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவா் மாற்றப்பட்டாா். செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பயனாக எஸ்.பி.பி.யின் உடல்நிலை சற்று சீரடைந்ததாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அவா் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று தெரிவித்தது. அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாடகியும் அவருடைய சகோதரியுமான எஸ்.பி. சைலஜா தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த முன்னேற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. அவருக்குச் செயற்கை சுவாசம் தற்போது அளிக்கப்படவில்லை. அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கவனித்து வருகிறார்கள். நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அவரால் நன்றாகச் சிறுநீர் கழிக்க முடிந்தது. அவருக்காக உலகமே பிரார்த்தனை செய்து வருகிறது என எனக்குத் தெரியும். இந்த நிலையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வருவார் என்று கூறியுள்ளார்.