முகப்பு
செய்திகள்

சூரரைப் போற்று: முடிவை மறுபரிசீலனை செய்ய சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள்

சூரரைப் போற்று படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

சூரரைப் போற்று படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஹரி சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா கடந்த வாரம் வெளியிட்டார். சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஹரி சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரி கூறியதாவது:

உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்:

ஒரு ரசிகனாக உங்கள் படத்தைத் திரையரங்கில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல.

நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு, திரையரங்கில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்குத் தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் திரையரங்கம் என்கிற கோயிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஓர் அங்கீகாரம்.

தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.