சினிமா சங்கங்களுக்கு சூர்யா ரூ. 1.50 கோடி நிதியுதவி
சூரரைப் போற்று பட வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 1.5 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு...
சூரரைப் போற்று பட வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 1.5 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.
‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.
சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இன்னமும் இயங்காமல் உள்ளதால், இயல்பு நிலைமை திரும்பிய பிறகு திரையரங்கில் வெளியாவதாக இருந்தது.
சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாக சூர்யா அறிவித்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கரோனா யுத்தக் களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், சூரரைப் போற்று பட வெளியீட்டுத் தொகையில் இருந்து ரூ. 5 கோடி ரூபாயைப் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் ரூ. 5 கோடியில் ரூ. 1.50 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு அளித்துள்ளார் சூர்யா. பெப்சி அமைக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளார். இதிலிருந்து ரூ. 20 லட்சம் இயக்குநர்கள் சங்கத்துக்கு அளிக்கப்படும். ரூ. 30 லட்சத்தைத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் ரூ. 20 லட்சத்தை நடிகர் சங்கத்துக்கும் அளித்துள்ளார் சூர்யா.
சூர்யா சார்பாக அவருடைய தந்தையும் நடிகருமான சிவகுமார், உதவித்தொகைக்கான காசோலைகளை குறிப்பிட்ட சங்கங்களுக்கு அளித்துள்ளார்.