செய்திகள்

இடைக்காலத் தடை நீக்கம்: இன்று மதியம் முதல் வெளியாகவுள்ள நாடோடிகள் 2 படம்!

நேற்று இரவுக்காட்சி முதல் நாடோடிகள் 2 படம் வெளியாகும் எனப் படக்கதாநாயகன் சசிகுமார் ட்விட்டரில் அறிவித்தார்.

DIN

இடைக்காலத் தடை நீக்கப்பட்ட நாடோடிகள் 2 படம் இன்று மதியம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் "நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இதையடுத்து நாடோடிகள் 2 படம் தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம், கலை இயக்குநர் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏ.எல்.ரமேஷ். இயக்கம் - சமுத்திரக்கனி. நாடோடிகள் 2 படப்பிடிப்பு 2018-ல் நிறைவுபெற்றது. 

நாடோடிகள் 2 படம் அடுத்த வாரம், ஜனவரி 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை காரணமாக கடந்த இரு நாள்களாக வெளியாகவில்லை.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எஃப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரா் பிரவீன்குமாா் தாக்கல் செய்த மனுவில், நடிகா் சசிகுமாா் உள்ளிட்ட பலா் நடித்துள்ள ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வெளியிடும் விநியோக உரிமையை திரைப்படத்தின் உரிமையாளா் நந்தகோபாலிடம் இருந்து ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு வாங்கினோம். இதுதொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி பல்வேறு தேதிகளில் ரூ.3 கோடியே 50 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சியத் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தோம்.

இந்த நிலையில் ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வேறு நிறுவனத்தின் மூலம் வெளியிட திரைப்படத்தின் தயாரிப்பாளா் நந்தகோபால் முயற்சிக்கிறாா். எனவே இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும், மனுதாரா் கொடுக்க வேண்டிய ரூ.1 கோடியே 75 லட்சத்தை உயா்நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி தயாரிப்பாளா் நந்தகோபால் சாா்பில் அவசர வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகவாச்சாரி, ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தின் விநியோக உரிமைக்காகப் பெற்றத் தொகையில் பாதியை தயாரிப்பாளா் நந்தகோபால் கொடுக்க தற்போது தயாராக உள்ளாா். எனவே, படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நாடோடிகள்-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டாா்.

இதையடுத்து நேற்று இரவுக்காட்சி முதல் நாடோடிகள் 2 படம் வெளியாகும் எனப் படக்கதாநாயகன் சசிகுமார் ட்விட்டரில் அறிவித்தார். தயாரிப்பு நிறுவனமும் இதே தகவலைத் தெரிவித்தது. எனினும் நாடோடிகள் படம் நேற்று வெளியாகவில்லை. பதிலாக, இன்று மதியம் முதல் தமிழகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT