சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவை பொருத்தவரை இதுவரை 85 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா ஆபத்து காரணமாக திரையரங்குகளை மூட உத்தரவிட்ட மாநிலங்களின் பட்டியல்:
1. கேரளா
2. ஜம்மு & காஷ்மிர்
3. தில்லி
4. ஒடிஷா
5. கர்நாடகம்
6. பிஹார்
7. மஹாராஷ்டிரம்
8. ராஜஸ்தான்
திரையரங்குகளில் படங்களைக் காண வரும் ரசிகர்களால் கரோனா தொற்று பரவும் என்கிற அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த எட்டு மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிடவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நேற்று, தமிழ்நாட்டில் தாராள பிரபு, அசுரகுரு, கயிறு, வால்டர், எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகனும், தஞ்சமடா நீ எனக்கு ஆகிய ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.