விரைவில் தொடங்குமா படப்பிடிப்புகள்?: செல்வமணியைத் தொடர்ந்து சின்னத்திரை சங்கமும் தமிழக அரசிடம் கோரிக்கை
அரசு கொடுத்த நிவாரணமும் நாங்கள் அளித்த நிவாரணமும் தொழிலாளர்களுக்குப் போதுமானதாக இல்லை.
சென்னை தலைமைச் செயலகத்தில் சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து, சின்னத்திரைத் துறையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ள அனுமதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியதாவது:
கரோனா ஊரடங்கால் சின்னத்திரை உலகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு கொடுத்த நிவாரணமும் நாங்கள் அளித்த நிவாரணமும் தொழிலாளர்களுக்குப் போதுமானதாக இல்லை. படப்பிடிப்புகள் தொடங்கினால் தான் அனைத்து பிரச்னைகளும் தீரும். போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளவும் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறைவான நபர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தவும் அனுமதியளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளோம். முதல் அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து பதில் தருவதாகக் கூறினார். நம்பிக்கையுடன் உள்ளோம் என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கேரளத்தில் திரைப்படப் பணிகளுக்குப் பகுதியளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங் ஆகிய பணிகள் நேற்று முதல் தொடங்குகின்றன. திரைப்படப் படப்பிடிப்பு இல்லாமல், ரீ ரெக்காா்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ‘பெப்சி’ (தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம்) தலைவா் ஆா்.கே. செல்வமணி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.