பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 2014-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்தார். அப்துல் காலிக் என்றும் தனது பெயரை மாற்றிக்கொண்டார். பிறகு, 2015-ல் கீழக்கரையை சேர்ந்த ஷாஃப்ரூன் நிஷா என்கிறவரைத் திருமணம் செய்துகொண்டார். 2016 ஏப்ரலில் பெண் குழந்தை பிறந்தது. ஷாஃப்ரூன் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்குப் பதில் அளித்தார் யுவனின் மனைவி ஷாஃப்ரூன். அப்போது அவரிடம் ஒரு ரசிகர், நன்றாக இருந்த யுவனை இப்படி இஸ்லாமியராக மாற்றிவிட்டீர்களே, பார்க்கவே கஷ்டமாக உள்ளது என்றார். இதற்குப் பதில் அளித்த ஷாஃப்ரூன், எந்தளவுக்கு மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றார். இதற்குப் பிறகு அந்த ரசிகர் கூறியதாவது: இளையராஜா சார் கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவர் மகனை இப்படி மாற்றிவீட்டீர்களே என்றார்.
இது உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. நான் உங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை. ஆனால் மக்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள் என எண்ணி அதிர்ச்சியடைகிறேன் என்றார் ஷாஃப்ரூன். மீண்டும் இதே விஷயம் குறித்து அந்த ரசிகர்கள் சீண்டவே, ஷாஃப்ரூன் கூறியதாவது: யுவனின் மனத்தில் நான் விஷத்தைக் கலக்கவில்லை. என்னைத் திருமணம் செய்யும் முன்பே அவர் இஸ்லாமியராக மாறிவிட்டார். நான் அவரைச் சந்திக்கும் முன்பே நான்கு வருடங்களாக இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தார் என்று கூறியுள்ளார்.