கோவாவில் நயன்தாரா: படங்களைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன்
கேரளாவிலிருந்து நேராக கோவா சென்றுள்ளார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கோவாவில் விடுமுறையைக் கழித்து வருகிறார்கள்.
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் என சமீபத்தில் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றார்கள். இருவரும் இணைந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடியதன் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், இன்ஸ்டகிராமில் வெளியிட்டார்.
இந்நிலையில் கேரளாவிலிருந்து நேராக கோவா சென்றுள்ளார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். கோவாவில் எடுத்த நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார்.