தலைவி படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது.
விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ்.
தலைவி படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகவிருந்த நிலையில் அதன் வெளியீடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைவி படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறந்த பிறகு தலைவி படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவி படம் ஓடிடியில் வெளியாகவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் கதாநாயகி கங்கனா அதை மறுத்துள்ளார். இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
தலைவி படத்துக்கான வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. வதந்திகளில் இருந்து விலகியிருங்கள். இந்தியா முழுக்கத் திரையரங்குகள் திறக்கப்படும்போது படத்தை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.