முகப்பு
செய்திகள்

ஊரடங்கின்போது சென்னையில் பல படப்பிடிப்புகள் நடைபெறுவது எப்படி?: தமிழ் நடிகை கேள்வி

முதல்வர் ஸ்டாலின் இதைக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

பொது முடக்கம் அமலில் இருக்கும்போது சென்னையில் அதிகாரபூர்வமற்றமுறையில் பல படப்பிடிப்புகள் நடைபெறுவது எப்படி என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார் நடிகை சாந்தினி.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மே 10 முதல் வரும் 24-ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனவும், நண்பகல் 12 மணி வரை மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளை மட்டும் திறக்கலாம் எனவும் அறிவித்தது. அதேவேளையில் அரசு, தனியாா் பேருந்து சேவை, வாடகை காா், ஆட்டோ சேவை ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தது. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. திரையரங்குகள் இயங்கவும் திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி பல படப்பிடிப்புகள் நடைபெறுவதாக தமிழ் நடிகை சாந்தினி தமிழரசன் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

இது முழு பொது முடக்கம் தானே? ஆனால் சென்னையில் எப்படி அதிகாரபூர்வமற்றமுறையில் பல படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன? மக்களின் உயிர் மிகவும் முக்கியம். வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த வேண்டும். 

முதல்வர் ஸ்டாலின் இதைக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

2010-ல் வெளியான சித்து +2 படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாந்தினி பல படங்களிலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.