பாமகவினர் ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்த்துவரும் நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக உடன் நிற்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் வசூல்ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றியடைந்து பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதேசமயம் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரான ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறி அத்திரைப்படத்தை பாமகவினர் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வெல்லுமா சூர்யாவின் 'ஜெய் பீம்'? - திரைப்பட விமர்சனம்
இதுதொடர்பான சுட்டுரைப் பதிவில் அவர், “பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டியதில் இயக்குநர் ஞானவேலின் பொறுப்புணர்வும் சமூகநீதியை உறுதிப்படுத்துவதில் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் ஊக்கமளிப்பதாக இருக்கின்றன.
சமூகநீதியை விரும்பாதவர்களுக்கு இத்தகைய திரைப்படங்கள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும், அநீதியையும் கேள்வி கேட்கும் திரைப்படங்கள் சமூகநீதியின் ஆயுதங்களே. ஒட்டுமொத்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும் ஆதரவாக உடன் நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சூர்யாவை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிக்க வேண்டாம்: அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்
மேலும் “சரியான செயலை செய்ததற்காக யாரும் கூனிக்குறுகிவிடக்கூடாது. திரைபிரபலம் என்பதற்கான பொருளை சூர்யா மறுவரையறை செய்துள்ளார்” என இயக்குநர் வெற்றிமாறன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.