நடிகர் விஜய்யின் தொடர் வெற்றிக்கான காரணம் குறித்து நடிகர் பிருத்விராஜ் பேசும் விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் கனா கண்டேன். இந்தப் படத்தில் வில்லனாக நடித்து தமிழில் அறிமுகமானவர் பிருத்விராஜ். தொடர்ந்து 'மொழி', 'கண்ணாமூச்சி ஏனடா', 'சத்தம் போடாதே', 'நினைத்தாலே இனிக்கும்' என இவர் நடித்த படங்கள் அதிக கவனம் பெற்றன.
மலையாள திரையுலகில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். மேலும் மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். தற்போது மோகன்லால் நடிக்கும் 'புரோ டாடி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அவரும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.
இதையும் படிக்க | அன்றே கணித்த சூர்யா : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 'சிங்கம் 2' பட நடிகர் கைது: சிக்கியது எப்படி ?
இவரது நடிப்பில் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான குருதி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தாதுன் படத்தின் மலையாள ரீமேக்கான பிரமம் படத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவரிடம் நடிகர் விஜய்யிடம் உங்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிருத்விராஜ், ''உங்களது வெற்றிக்கான மந்திரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்பேன். அவருக்கு என்ன படம் வெற்றி பெறும் என்று தெரியும். எல்லா நடிகர்களுக்கும் அந்த திறன் வேண்டும். ஒரு கதை வெற்றியடையுமா ? இல்லையா என்பதை அவரால் கணிக்க முடியும். அவருக்கு எந்த கதை வெற்றியடையும் என்று தெரியும்'' என்று பேசினார்.