அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படத்தின் மோசமான வசூலால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கிலப் படத்தின் இந்திய தழுவலான அமீர்கானின் லால் சிங் சத்தா கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது.
ஆனால், படம் வெளியானதிலிருந்து விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமே கிடைத்திருந்தது.
முதல் நாளில் இந்தப் படத்துக்கு இந்திய அளவில் ரூ.10.75 கோடி வசூல் கிடைத்ததைத் தொடர்ந்து, திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
காரணம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு பேட்டி ஒன்றில். ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் குழந்தைகளுடன் வெளிநாடு சென்றுவிடலாம் என என் மனைவி அறிவுறுத்தினார்’ என அமீர்கான் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: மாமனிதன் திரைப்படத்திற்கு 4 சர்வதேச விருதுகள்!
அதன்பின், அமீர்கான் படம் என்றாலே அதை சிலர் எதிர்க்கத் துவங்கினர். லால் சிங் சத்தா திரைப்படத்திற்கும் ’பாய்காட்(boycott) லால்சிங் சத்தா’ என டிவிட்டரில் அப்படத்தை தடை செய்ய கருத்துகள் பரவின.
இந்நிலையில், ரூ.180 கோடியில் 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் கடந்த 5 நாள்களில் ரூ.46 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வளவு குறைவான வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்கள் வட இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, நல்ல வசூலையும் பெற்றுவருகிறது. அதே போல ஹிந்தி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. அந்த தாக்கம் லால் சிங் சத்தா படத்தின் மீதும் எதிரொலித்துள்ளது என்றும் திரை விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.