ஆஸ்கர் இறுதிப் பட்டியல்: ஜெய்பீம் இடம்பெறவில்லை -ரசிகர்கள் ஏமாற்றம்
ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர
ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆஸ்கர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள திரைப்படங்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகி விமர்சகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
Advertisement
Advertisement
ஞானவேல் எழுதி இயக்கிய இந்தப் படம் பழங்குடியின மக்களுக்கு நடக்கும் துயரங்களை யதார்த்தமாக பதிவு செய்திருந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் சூர்யா அவரது வேடத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட 276 படங்களில் ஜெய் பீம் திரைப்படமும் இடம் பிடித்தது. இதனிடையெ இன்று வெளியான இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம்பெறவில்லை. இதனை அகாடமி தனது சுட்டுரையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது வெளியான இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தப் படம் உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் ஷஷாங்க் ரிடம்சன் படத்தை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.