திருமணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ள கருத்து குறித்து இயக்குநர் நவீன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சமீபத்தில் ஒரு வழக்கில் எந்த மதத்தை சேர்ந்தரவாக இருந்தாலும், அவர் சார்ந்த மதத்தின் சடங்கு, சம்பிரதாயப்படி திருமணம் நடந்தால்தான் அதனை பதிவு செய்ய முடியும்,
அவ்வாறு இல்லாமல் நேரடியாக திருமணம் நடந்தால் அதனை பதிவு செய்ய முடியாது. எந்த சடங்குகளும் நடைபெறாமல் சான்றிதழ் வழங்கினால், அது போலி திருமண சான்றிதழாகவே கருதப்படும் என கருத்து தெரிவித்திருந்தது.
இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களைப் பார்க்க முடிந்தது. அதன் ஒரு பகுதியாக 'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தேகத்தினை தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.
இதையும் படிக்க | சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்துக்கு கிடைத்த முதல் விமர்சனம்
அவரது பதிவில், ''இது பொய்யான செய்தி என்று நினைத்தேன். மதுரை உயர்நீதிமன்றம் இப்படி சொல்லியிருப்பதை நம்பமுடியவில்லை. அப்படியானால் 1968 அண்ணா அமல்படுத்திய சுயமரியாதை திருமண சட்டத்தின் நிலை என்ன? சட்டப்படி பதிவு திருமணம் (மதச்சடங்குகளின்றி) செய்த என் போன்றோர் திருமணம் செல்லுமா செல்லாதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.