நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படக்குழுவினர் தனிவிமானம் மூலம் வெளியூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் வெளியான நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது.
நடிகர் விஜய்யுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள தளபதி 67 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
ஒரு மாதமாக கொடைக்கானல் மற்றும் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து தனிவிமானம் மூலம் இன்று காலை படக்குழுவினர் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன், நடிகை திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் கூட்டணி சேரவுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.