நான் அதிர்ஷ்டமில்லாதவரா? கிண்டல்களுக்கு பிரியா பவானி சங்கர் வேதனை!
நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை குறித்த கிண்டல்கள் பாதித்ததாகக் கூறியுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் கலமையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
பொதுவாகவே சமூக வலைதளங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தாலே அந்தப் படம் வெற்றி பெறாது என கிண்டல் செய்பார்கள். இது குறித்து வேதனை அடைந்த பிரியா பவானி சங்கர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:
சிரித்துக்கொண்டே ஒருவரை திட்டுவது என்பது எப்படி எனக்கு புரியவில்லை. வலுவாக இருப்பதாக நடிக்கிறேன். ஒருவரை அதிர்ஷடமில்லாதவர் என அழைப்பது சரியானது அல்ல. அது நிச்சயம் சம்பந்தபட்டவரை பாதிக்கும். இப்படி சமூக வலைதளங்களில் பேசுவது வருத்தமளிக்கிறது.
ஒரு நாயகனை பார்த்து யாராவது இப்படி சொல்லுவார்களா? படங்கள் சரியாக போகவில்லை என யாராவது ஹீரோக்களை பார்த்து அல்லது ஆணை பார்த்து அதிர்ஷ்டமில்லாதவன் என கிண்டல் செய்வதுண்டா? இது ஒரு ஆணாதிக்க மனோபாவம்.
யாராவது ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் எனும்போது அவருடைய பெற்றோர்கள் எவ்வளவு வருத்தமடைவார்கள். எனது பெற்றோரை நினைத்து நான் கவலையுற்றேன். நான்கு பெரிய படங்களில் நடித்தது எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை திறமையினால் வந்தது என்றார்.