விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! ரசிகர்களிடம் உருக்கம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 நடிகை சரண்யா துராடி விபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரில் நடித்துவரும் நடிகை சரண்யா துராடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வீட்டிலிருந்தபடி ஓய்வு எடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனைக்கும், காயங்கள் குணமாவதற்கான வழிகளை பின்பற்றுவதற்குமே நாள்களைக் கழித்துவருவதாக தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோரஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ராஜ்குமார், மனோகரன், ஹேமா, ஷாலினி, வசந்த் வசி, வி.ஜே. கதிர், சரண்யா துராதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. தற்போது அப்பா - மகன்கள் பாசத்தை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 எடுக்கப்பட்டு வருகிறது.
மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து தற்போது கதை நகர்கிறது. இதில் முதல் மருமகளாக நடித்து வருபவர் நடிகை சரண்யா துராதி.
செய்திவாசிப்பாளரான இவர், நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து தொடரிலும் நாயகியாக நடித்தார்.
பைக் ஓட்டுவதை தனது பொழுதுபோக்காக கொண்ட இவர், அவ்வபோது பைக் ஓட்டியவாறு பயணம் செய்வது வழக்கம். தற்போது காலில் அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை சரண்யா பகிர்ந்துள்ளார்.
அதில், மருத்துவமனைக்குச் செல்வதும், காயங்களை ஆற்றும் வழிகளை பின்பற்றுவதுமாக நாள்கள் கழித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வரும் படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைந்து குணமடைந்து வர நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.