தவறுக்கு வருந்துகிறேன்..! சாவர்க்கர் குறித்த கருத்துக்கு சுதா கொங்கரா மன்னிப்பு!
இயக்குநர் சுதா கொங்கரா தனது தவறான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டது.
சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது ஜி.வி.யின் 100வது படம் என்றும் கூறி வந்தார்கள்.
சூர்யா கங்குவா படத்தில் நடித்துமுடித்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தினை இயக்கி முடித்தார். அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றன.
Advertisement
Advertisement
நேர்காணல் ஒன்றில் சுதா கொங்கரா, “நான் வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ளேன். என்னுடைய ஆசிரியர் ஒருமுறை சொன்னார். சாவர்க்கர் மிகப் பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். சாவர்க்கர் திருமணம் செய்து, அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்தப் பெண்ணுக்கு வீட்டில் இருப்பதற்குத்தான் விருப்பம். ஏனென்றால் அந்தக் காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள்.
பின்பு அவள் படிக்க போகும்போது, அந்தத் தெருவில் உள்ளவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். அந்த அம்மா அழுதுகொண்டு, பள்ளிக்கு போகமாட்டேன் எனச் சொல்வார். அப்போது சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா? அங்கிருந்துதான் என்னுடைய கேள்விகள் எழுந்தன” என்றார்.
இது இணையத்தில் வைரலானது. இதில் தகவல் பிழை இருக்கிறதெனவும் அது ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே எனவும் பலரும் சமூகவலைதளத்தில் விமர்சித்தனர்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் சுதா கொங்கரா கூறியதாவது:
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன்.
ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.
மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.