ஷோபா, ராதிகா வரிசையில் ஸ்வாசிகா..! பாராட்டிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்!
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நூறு சாமி படத்தில் நடித்த ஸ்வாசிகாவைப் பாராடிய குறித்து...
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நூறு சாமி படத்தில் நடித்த ஸ்வாசிகாவை மிகவும் புகழ்ந்து, “இந்தாண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் நூறு சாமி. இந்தப் படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மலையாள நடிகை ஸ்வாசிகா தமிழில் லப்பர் பந்து படத்தில் இருந்து தனது அசாத்தியமான நடிப்பினால் கவனம் ஈர்த்து வருகிறார்.
Advertisement
Advertisement
கணவனை இழந்த தாய்க்கும் உணர்வுகள் உண்டு, உரிமைகள் உண்டு என்பதைக் காட்டும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியிருப்பதாவது:
இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி. இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.
விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துபோது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஸ்வாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ அதேபோன்று இந்தப் படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.
பாடலில் வரும் சின்ன சின்ன விஷயங்களில் கூட ஸ்வாசிகா அற்புதமான நடித்திருக்கிறார். வலி - அவமானம் என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும்என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
தேசிய விருதுக்கான பட்டியலில் ராதிகா சரத்குமாருடன் ஸ்வாசிகாவும் இணைந்துள்ளதைக் குறிப்பிட்டு ஏ.ஆர். முருகதாஸ் பேசியது கவனம் பெற்றுள்ளது.