ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!
தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு ர வரிசையில் பெயர் சூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்த பாரதிராஜா....
இயக்குநர் பாரதிராஜா அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு அவர்களுடைய இயற்பெயரை வைக்காமல், ர வரிசையில் பெயர் சூட்டும் வழக்கத்தை கொண்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர், நடிகைகளுக்கு இயற்பெயரை மாற்றி திரைப்பெயர்களை சூட்டினார். பின்னாளில் அந்தப் பெயர்கள் அவர்களுக்கு பெரும் புகழையும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தையும் பெற்று தந்தது.
முதல் மரியாதை படத்தில் நடித்த சாஷாவின் பெயரை ரஞ்சனி எனப் பெயர் மாற்றி அறிமுகப்படுத்தினார். மண் வாசனை படத்தில் நடிகை ரேவதியை அறிமுகப்படுத்தும்போது அவரது இயற்பெயரான ஆஷா என்ற பெயரை மாற்றினார்.
Advertisement
Advertisement
இயக்குநர் பாரதிராஜாவுக்கு ர வரிசையில் தொடங்கும் பெயர்களுக்கு தனிப்பட்ட விருப்பம் இருந்ததாக அவர் நெருங்கிய வட்டார நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் அறிமுகப்படுத்தும் நடிகைகளுக்கு ர வரிசையில் பெயர் சூட்டுவதை ஃபார்முலாவாகவே வைத்து இருந்தார்.
கிழக்கே போகும் ரயில் படத்தை இயக்கிய பாரதிராஜா, நாயகியாக அறிமுகப்படுத்திய ராதிகாவுக்கும் இவர்தான் பெயர் சூட்டினார்.
தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதா, புதிய வார்ப்புகள் படத்தில் ரதி, கடலோர கவிதைகள் படத்தில் ரேகா, நாடோடி தென்றல் படத்தில் ரஞ்சிதா, என்னுயிர் தோழன் படத்தில் ரமா என ர வரிசை பெயர்களை வைத்து இன்றளவும் அவர் பெயர் சூட்டிய நடிகைகள் புகழ்பெற்று இருக்கின்றனர். தாஜ்மஹால் படத்தில் ரியாசென் என இயற்கையாகவே ர வரிசையில் அமைந்துவிட்டது.
இதில் ர வரிசையில் பெயர் மாற்றம் செய்யப்படாத ஒரே நடிகை சுகன்யா என்றே சொல்லலாம். அவரின் இயற்பெயரை மாற்றி புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகப்படுத்தும்போது சுகன்யா என்ற பெயரை மாற்றினார்.
சுகன்யாவைத் தொடர்ந்து, அதன் பின்னர் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கெல்லாம்கூட ர வரிசையில்தான் பெயர் வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார் பாரதிராஜா.
இதனைத் தொடர்ந்து, கண்களால் கைது செய் படத்தில் நடிகை பிரியாமணிக்கு அவரின் பெயரை மாற்றம் செய்யாமல் அறிமுகப்படுத்தினார்.
இயக்குநர் பாரதிராஜா நிகழ்ச்சியொன்றில், நடிகைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்படுவது குறித்து பேசும்போது, ”நான் பிரியாமணிக்கு மட்டும் பெயர் மாற்றம் செய்யவில்லை, அடுத்த வீட்டு பெண்ணுக்கு நாம் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் பெயர் மாற்றம் செய்வதை விட்டுவிட்டேன்” என்று கூறினார்.
பாரதிராஜாவின் பெயர் மாற்றுவதின் நோக்கம், எளிதில் உச்சரிக்கக்கூடிய பெயராக இருந்தால், ரசிகர்களிடன் எளிதாக சென்றடைவார்கள் என்பதை யுத்தியாக வைத்திருந்தார்.
அவர் பெயர் மாற்றிய நடிகைகளுக்கு புதிய அடையாளத்தை மட்டும் கொண்டு சேர்க்காமல், அவர்களுக்கு அதிர்ஷ்டமாகவும் மாறி நிலைத்து நிற்கிறது.