இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடித்து வருகிறார். நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.
விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படம் கோடை வெளியீடாக திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலிரவின்போது நாயகனுக்கு பாலுக்குப் பதிலாக மதுவை ஊற்றிக்கொடுக்கும் நாயகி என சுவாரஸ்யமான இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசிய திராட்சை ரசம் தொடர்பான வார்த்தைகள் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு விளக்கமளித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
அன்பார்ந்த கிறிஸ்தவ சபைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம். நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தேன்.
ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.