‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை: உயா்நீதிமன்றம்
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில், டெடி- 2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் ஆகிய படங்களின் தயாரிப்புப் பணிகளுக்காக, ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் கடன் பெற்றிருந்தாா்.
இதில் ரூ. 45 கோடியை திருப்பிச் செலுத்திய ஞானவேல் ராஜா, மீதமுள்ள ரூ. 55 கோடியை திருப்பி வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, ரிலையன்ஸ் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தொகையை திருப்பித் தராமல் நடிகா் சூா்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகை முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினாா்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தாா்.