நடிகர் மம்மூட்டி நோய் பாதிப்பிலிருந்து மீண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.
தற்போது, களம் காவல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, மோகன்லாலுடன் பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
வழக்கமாக, ஒன்றிரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மம்மூட்டி, கடந்த சில மாதங்களுக்கும் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார். தொடர்ந்து, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் பரவின.
ஆனால், சாதாரண உடல்நிலை பிரச்னைதான் என மம்மூட்டி தரப்பிலிருந்து விளக்கம் வந்தது. இருந்தும், நடிகர் மோகன்லால் சபரி மலைக்குச் சென்று மம்மூட்டிக்கு அர்ச்சனை செய்தது சந்தேகத்தை வலுத்தது. இதற்கிடையே, நடிகர் மம்மூட்டி சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், 7 மாத சிகிச்சைக்குப் பின் நடிகர் மம்மூட்டி பூரண நலமடைந்ததாகவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் மோகன்லால், மம்மூட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை இதயக் குறியீட்டுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், நடிகை மஞ்சு வாரியர், “புலியே, மீண்டும் வரவேற்கிறோம்!” எனக் குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதேபோல், மலையாள சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களும் மம்மூட்டிக்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.
இதையும் படிக்க: சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.