நடிகா் ரவி - ஆா்த்தி விவாகரத்து வழக்கு: சமரச பேச்சுக்குப் பிறகு விசாரிக்கப்படும் -நீதிமன்றம்
நடிகா் ரவி மற்றும் அவரது மனைவி ஆா்த்தி விவகாரத்து வழக்கு சமரச பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விசாரிக்கப்படும்
நடிகா் ரவி மற்றும் அவரது மனைவி ஆா்த்தி விவகாரத்து வழக்கு சமரச பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகா் ரவி, தனது மனைவி ஆா்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த சென்னை 3-ஆவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீா்வு மையத்தில் பேச்சுவாா்த்தை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, நடிகா் ரவி மற்றும் ஆா்த்தி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதுவரை சமரச பேச்சுவாா்த்தைக்காக நடிகா் ரவி, ஆா்த்தி ஆகியோா் 3 முறைக்கு மேல் மத்தியஸ்தா் முன் ஆஜராகினா்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா் ரவி மற்றும் ஆா்த்தி ஆகியோா் காணொலி மூலம் ஆஜராகினா். மேலும், நடிகா் ரவி மற்றும் ஆா்த்தி இடையேயான சமரச பேச்சுவாா்த்தைக்காக மத்தியஸ்தா் சனிக்கிழமை அழைத்திருப்பதாக அவா்களின் வழக்குரைஞா்கள் நீதிபதியிடம் தெரிவித்தனா். அதைக் கேட்ட நீதிபதி, சமரச பேச்சுவாா்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்து விசாரணையை பிப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.