மதுப்பழக்கம்... தற்கொலைக்கு முயற்சித்தேன்: பா. இரஞ்சித்
இயக்குநர் பா. இரஞ்சித் மதுப்பழக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.
மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், மிஷ்கின், லிங்குசாமி, பா. இரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
இதையும் படிக்க: மிஷ்கின் பேச்சால் சங்கடத்திற்கு ஆளான வெற்றி மாறன்!
நிகழ்வில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், " தினகரன் சிவலிங்கம் என் கல்லூரித் தோழன். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் சினிமாவுக்கு வந்தோம். முதலில் நான் இயக்குநராகிவிட்டேன். தினகரனையும் ஜெயக்குமாரையும் (ப்ளூ ஸ்டார் இயக்குநர்) அனிமேஷன் இயக்குநர்களாக மாறச்சொன்னேன். ஆனால், அவர்கள் சினிமா இயக்குநராக மாறிவிட்டனர். படத்தின் கதையை தினகரன் சிறப்பாக எழுதியுள்ளார்.
நான் 12-வது படிக்கும்போது தற்கொலை செய்யலாம் என முயற்சித்தேன். காரணம், என் அப்பா பெரிய குடிப்பழக்கத்தில் இருந்தார். அதனால், என் அம்மா மிகக் கஷ்டப்பட்டார். இதைப்பார்த்து என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், எப்படியோ தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டேன். என் தந்தை மிக நல்லவர், எங்களுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். ஆனால், குடி அவரை சீரழித்தது. அதனாலேயே, கிட்னி செயலிழந்து உயிரிழந்தார்.
பாட்டல் ராதா கதையைப் படிக்கும்போது பல இடங்களில் உணர்ப்பூர்வமாக இருந்தது. குடி ஒரு நோய் என்பது புரியவே நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இந்தப் படம் ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.” எனத் தெரித்தார்.