மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த விநாயகன்! நடிக்க தடை விதிக்கப்படுமா?
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த விநாயகன்...
மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடிபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சர்ச்சையாகியுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகன் சில மாதங்களுக்கு முன் அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.
Advertisement
இதையும் படிக்க: சந்தானம் பிறந்த நாள்: டிடி நெக்ஸ்ட் லெவல் போஸ்டர் வெளியீடு!
பின், கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கடுமையாக வசைபாடினார். அந்த விடியோ இணையத்தில் வெளியாகி விநாயகன் மீதான மதிப்பைக் கெடுத்தது.
இந்த நிலையில், மதுபோதையில் தன் வீட்டிலிருந்தபடி சாலையில் செல்வோரை விநாயகன் தகாத வார்த்தையால் தாக்கியுள்ளார். இதனை, எதிர் வீட்டிலிருந்தவர் விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, மீண்டும் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும், விநாயகனை இப்படியே விடக்கூடாது, மலையாள சினிமாவில் நடிக்க முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தன் முகநூலில் பதிவொன்றை வெளியிட்ட விநாயகன், “ ஒரு நபராகவும் நடிகராகவும் நிறைய விஷயங்களைக் கையாள வேண்டும். என்னால் அது முடியாது. என் எதிர்தரப்பினரிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.