சினிமா தயாரிப்பைக் கைவிடும் லைகா?
சினிமாவிலிருந்து லைகா விலகுவதாகத் தகவல்...
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா திரைப்பட தயாரிப்பிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் நடிகர் விஜய்யின் கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமா தயாரிப்புக்குள் நுழைந்தது. தொடர்ந்து, லைகாவின் பெயர் கவனம் பெற அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.
லைகா தயாரித்ததில் ரஜினியின் 2.0, செக்கச் சிவந்த வானம், டான், பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்கள் நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்தன.
Advertisement
Advertisement
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வெற்றி பெற்ற லைகாவுக்கு லால் சலாம், சந்திரமுகி - 2, இந்தியன் - 2 ஆகிய படங்கள் தோல்வியைக் கொடுத்ததுடன் வேட்டையன், விடாமுயற்சி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியையும் தராததால் லைகா நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு இணை தயாரிப்பாளராக இருந்த லைகா சில காரணங்களால் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்று அப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் இந்தியன் - 3 ஆகிய படங்களே லைகா தயாரிப்பில் உள்ளன. இதில், ஜேசனின் படத்திற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இதையும் படிக்க: வீர தீர சூரன் டிரைலர் தேதி!
இந்த நேரத்தில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேசன் சஞ்சய் படத்துடன் லைகா நிறுவனம் சினிமா தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகவுள்ளதாம்.
அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் கடன் பிரச்னைகள் முடிவடைந்ததும் மீண்டும் திரைப்படத் தயாரிப்பிற்கு வரலாம் என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.