ஹிஜாப் அணிந்து மசூதிக்குச் சென்ற தீபிகா படுகோன்..! கடுமையான விமர்சனம்!
சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகும் தீபிகா படுகோன் பற்றி...
நடிகை தீபிகா படுகோன் அபு தாபியின் சுற்றுலா துறைக்கான விளம்பரத்தில் ஹிஜாப் அணிந்துள்ள விடியோ சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஹிந்துவாக இருக்கும்போது எனது ஆடை எனது சுதந்திரம் எனக் கூறும் தீபிகா முஸ்லிமாக இருக்கும்போது ஆடைக் கட்டுப்பாடு ஏன் என அவரைக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார். இவரும் ரன்வீர் சிங்கும் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி வருகிறது.
பதான் படத்தில் பிகினி உடையில் நடித்தபோது தீபிகா படுகோன் கிண்டலுக்கு உள்ளானார்.
இவரது அட்டைப்பட புகைப்படங்களும் திருமணம் தாண்டிய உறவு குறித்து அவர் பேசியதும் 2015ஆம் ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளானது.
இந்நிலையில், தனது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் உடன் இணைந்து அபு தாபியின் சுற்றுலா துறைக்கு விளம்பர தூதராக இணைந்துள்ளார்கள்.
இந்த விளம்பரத்திற்கான ஒரு விடியோவில் தீபிகா ஹிஜாப் அணிந்து ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் நடக்கும் காட்சிகள் உள்ளன.
இந்த விடியோவுக்கு ‘மேரே சுகோன்’ (எனது அமைதியே) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விடியோவில் அபு தாபியின் பல்வேறு இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆடைச் சுதந்திரம் பற்றி பேசும் தீபிகா தற்போது மசூதிக்கு மட்டும் ஏன் இப்படிச் செல்கிறார்? போலியான பெண்ணியவாதி தீபிகா என விமர்சிக்கப்பட்டுள்ளார்.
பணத்திற்காக ஹிஜாப் அணிவதில் பிரச்னை இல்லை. இவர்கள் பெண்ணியவாதி இல்லை, ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் எனவும் எக்ஸ் தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அது ஹிஜாப் அல்ல, அபயா எனவும் சிலர் கருத்துக்கூற எப்படி இருந்தாலும் தீபிகாவின் செயலில் தவறிருக்கிறது எனவும் கூறிவருகிறார்கள்.
ஜவஹர்லால் நேரு பல்கலை. 2020ஆம் ஆண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அவரது புதிய படம் வெளியாக இருந்ததது. அதனால், அவர் மீது சர்ச்சை கிளம்பியது.
இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து நேரம் குறித்த பிரச்னைகளால் தீபிகா விலகியது சர்ச்சையானது.
சமீபத்தில் அவரை கல்கி 2 படத்தில் இருந்து படக்குழு நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, சமூக வலைதளத்தில் தீபிகா படுகோன் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அவர் பதில் சொல்லுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.