ஜன நாயகன் விவகாரம்: தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தும் நிலையில், மெர்சல் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட ட்வீட் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
ஜன நாயகன் திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், இன்னும் தணிச்சைச் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் வெளியீட்டைத் தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு கண்டனம் தெரிவித்து, ராகுல் காந்தி பதிவிட்ட ட்வீட்டை பகிர்ந்து காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவின் சக்கரவர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்துக்கு ஆதரவாக ராகுல் வெளியிட்ட பதிவில், ”மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு - இறக்கச் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டிருப்பார்.
இதனை மீண்டும் பகிர்ந்துள்ள பிரவீன் சக்கரவர்த்தி, “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவை ஒடுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், நரேந்திர மோடி மீண்டும் தமிழ் மக்களை அவமதிக்கும் விதமாக, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.