கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!
நடிகை ரேச்சல் ரெபெக்கா குறித்து....
நடிகை ரேச்சல் ரெபெக்கா நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நிறைய குணச்சித்திர நடிகர்கள் திறமையுடன் உள்ளனர். நாயகன், நாயகிக்கு அண்ணனாக, தம்பியாக, சகோதரிகளாக, குடும்ப உறவுகளாக என ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் இவர்கள் நடித்து வருகின்றனர்.
இதில், திரும்பத் திரும்ப சில நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளாகவும், ஒரே கதாபாத்திரத்திரங்களைத் தேர்வு செய்தும் நடிக்கின்றனர் அல்லது அக்கதாபாத்திரத்திற்கு அவர்கள்தான் என இயக்குநர் தரப்பிலிருந்தும் அணுகப்படுகின்றனர்.
Advertisement
ஆனால், இதில் சிலர் மட்டுமே, சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் நல்ல கதாபாத்திரத்தில் இருக்க வேண்டுமென ஈடுபாடுடன் நடிக்கின்றனர்.
இந்த வகையில், தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவராக நடிகை ரேச்சல் ரெபெக்கா தெரிகிறார்.
மருத்துவரான ரேச்சல், இப்படை வெல்லும் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி கடைசி விவசாயி திரைப்படத்தில் நீதிபதியாக சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் காத்திரமான கதாபாத்திரமாக இருந்தார். தொடர்ந்து, மணிகண்டன் நடிப்பில் ஹிட் அடித்த குட் நைட் படத்தில் அக்காவாக நடித்து கவனம் ஈர்த்தார்.
இப்படங்கள் நல்ல வெளிச்சத்தைக் கொடுத்ததால் அடுத்ததாக பெரிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமென ரேச்சல் யோசிக்காமல், ஓரிரு நிமிடங்களே வரக்கூடிய நடிகையாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்து பல ரீல்ஸ்களில் இடம்பிடித்தார்.
தற்போது, தாய்கிழவி திரைப்படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து படம் முழுவதும் வந்து பலரையும் ஈர்த்துள்ளார். முக்கியமாக, இப்படத்தில் பதின்ம வயது மகனுக்கு அம்மாவாக நடித்ததுடன் உசிலம்பட்டி வசன உச்சரிப்புகளை அட்டகாசமான உடல்மொழிக்குக் கொண்டு வந்து பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறிய ரேச்சல் ரெபெக்கா எதிர்காலத்தில் விருதுகள் வாங்கக்கூடிய நடிகையாகவே வலம்வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.