தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகும் ராதிகா சரத்குமார்!
புத்தம்புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ராதிகா நடுவராகப் பங்கேற்கவுள்ளது குறித்து...
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை ராதிகா நடுவராகப் பங்கேற்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மகா நடிகை என்ற நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தாய் கிழவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளை பரிசீலனை செய்துவரும் ராதிகா சரத்குமார், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களில் நாள்தோறும் மக்களை மகிழ்வித்து வந்த ராதிகா, தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் வாராவாரம் ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார், சன் தொலைக்காட்சியில் சித்தி தொடரின் மூலம் சின்ன திரையில் கால் பதித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை, அரசி, தாமரை, சந்திரகுமாரி, வாணி ராணி, சித்தி -2 உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்துள்ள ராதிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அறம், மனுஷி படங்களின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் காலனி என்ற படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் ராதிகா பங்கேற்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகா நடிகை முதல் சீசனைத் தொடரந்து, மகா நடிகை இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இதில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிக்காட்டவுள்ளனர். இவர்களை மதிப்பீடு செய்து மெருகூட்டும் பொருப்பை ராதிகா சரத்குமார் ஏற்றுள்ளார். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.