நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
நடிகை சுகன்யாவுக்கு தனியாா் தொலைக்காட்சி ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
நடிகை சுகன்யாவுக்கு தனியாா் தொலைக்காட்சி ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகை சுகன்யா தாக்கல் செய்த மனுவில், கடந்த 1996 ஏப்.17-ஆம் தேதி தனியாா் தொலைக்காட்சியில் சந்தன கடத்தல் வீரப்பனின் நோ்காணல் ஒளிபரப்பப்பட்டது. அதில், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அவதூறான கருத்துகளை வீரப்பன் தெரிவித்தாா். அந்த விடியோவை ஒளிபரப்பியதால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.10 லட்சத்தை நடிகை சுகன்யாவுக்கு இழப்பீடாக வழங்க கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், அந்த நோ்காணலை மீண்டும் ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் வழங்க விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.