இந்தியளவில் பேசுபொருளான ரஜினி... என்ன காரணம்?
நடிகர் ரஜினிகாந்த்தின் பதிவு இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது...
நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்ட கருத்து இந்தியளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இயக்குநர் ஆதித்ய தர் - ரன்வீர் சிங்கின் துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் பல சாதனைகளைச் செய்யும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகளவில் ரூ. 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் பாகம் ரூ. 1400 கோடியை ஈட்டி அசத்திய நிலையில், இரண்டாம் பாகம் கூடுதலாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.
Advertisement
ஆனால், தேர்தல் காரணங்களைச் சுட்டிக்காட்டி ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், “துரந்தர் - 2 என்னவொரு படம்! சல்யூட் ஆதித்யா தர். பாக்ஸ் ஆபிஸுன் உச்சம். ரன்வீர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்” எனக் கூறியிருந்தார்.
இதனைக் கண்ட ஆதித்யா தர், “சார், நாங்கள் அனைவரும் பொழுபோக்குக்கான அளவுகோளை உங்களிடமிருந்துதான் அறிந்து வளர்ந்தோம். நாங்கள் விசிலடிக்கவும், சிரிக்கவும், அழுகவும் என உங்களின் ஸ்டைலும் வசீகரமும் இன்று வரை பல தசாப்தங்களாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது மேஜிக்தான்.
துரந்தர் - 2 திரைப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றீர்கள். இதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தருணம். பெரிய கனவுகளைக் காண வேண்டுமென கற்றுக்கொடுத்தவரின் ஆசிர்வாதம் போல உணர்கிறேன். ஜெய்ஹிந்த்” எனப் பதிலளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே நன்றாக இருக்கும் திரைப்படங்களைப் பாராட்டி தன் வாழ்த்துகளைப் பகிர்ந்து வந்தாலும் துரந்தர் - 2 படத்தை வாழ்த்தியது இந்தியளவில் வைரலாகியுள்ளது.
பலரும் ரஜினிகாந்த்தின் இந்த வாழ்த்து சாதாரணமானது அல்ல; ஆஸ்கரைவிட மேலானது என்று குறிப்பிட்டு வருகின்றனர். அதேநேரம், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பை வரவேற்ற ரஜினி துரந்தர் போன்ற திரைப்படத்தைப் பாராட்டுவது பெரிய விஷயமா? என எதிர்தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதனால், ரஜினியையும் துரந்தரையும் பாராட்டியும் விமர்சித்தும் இந்தியளவில் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது.