ரூ. 3,300 கோடி வசூலித்தும் நேர்காணல் அளிக்காத இயக்குநர்!
துரந்தர் இயக்குநர் குறித்து...
துரந்தர் திரைப்படங்களின் இயக்குநர் ஆதித்யா தர் நேர்காணலே வழங்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 19 அன்று தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி 2,000 கோடி வசூலைத் தொட்டது. ஒட்டுமொத்தமாக இரண்டு பாகங்களும் ரூ. 3,300 கோடி வசூலைக் கடந்து இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.
Advertisement
Advertisement
அதேநேரம், உண்மைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கதையாக உருவானதால் சில சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக, இப்படம் பாஜக ஆதரவு திரைபடம் என்றும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக இருக்கிறது என்றும் விமர்சனங்கள் வந்தன.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆதித்யா தர் பதிலளிப்பார் எனப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது வரை அவர் எந்த நேர்காணல்களும் அளிக்கவில்லை. மேலும், படத்தின் கதை குறித்து எழுந்த சில கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவில்லை. இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 3 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்த பின்பும் அப்படத்தின் இயக்குநர் எந்த நேர்காணல்களையும் வழங்காதது ஆச்சரியத்தையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.