"பிக் பாஸ்' வெளிச்சத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் ஓவியா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற ஓவியாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ராகவா லாரன்ஸ் இயக்கும் "காஞ்சனா 3' படத்தில் ஒப்பந்தமாகியுள்ள ஓவியா, அதன் முதற்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இப்படத்தை முடித்து இன்னும் இரண்டு முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதைப் போல் கடந்த தீபாவளிக்கு தமிழகத்தின் அநேக ஜவுளி, நகை கடை விளம்பரங்களிலும் நடித்து, முன்னணி ஹீரோயின்கள் போல் சம்பளம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தனது வருங்காலத் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது... "தற்போது திருமணம் பற்றி எந்தத் திட்டமும் கிடையாது. இப்போது இருக்கிற சூழலில் திருமணம் செய்து கொள்வது ரொம்பவே கஷ்டம். எனக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லை. எல்லோரும் இங்கே தனித்தனி உலகம்தான். யாருக்கும் யாரும் தேவையில்லை என்கிற நிலை உருவாகி இருப்பதாக உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஓவியா.