ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சிவா மனசுல புஷ்பா'. வாராகி நடித்து இயக்கி வரும் இப்படம், சமீபமாக அரசியல் அரங்கில் எழுந்து அடங்கிய சர்ச்சைகளின் கோர்வையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷிவானி குரோவர், ஜெஸ்மி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மனோபாலா, கே.ராஜன், ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து வாராகி பேசும் போது...
""இன்றைய எங்கள் தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் பொது மக்களுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன. வசதி வாய்ப்புகளும், அநீதிகளும் பெருகி விட்ட சமூகத்தில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊழலும், அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம். 30 ஆண்டு கால ஈழ போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்... இந்த தலைமுறையின் வரலாற்றை, எங்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டு இருக்கின்றன. காலங்காலமாக பேசி பேசி, எங்களை தெருவில் இறக்கி விட்டு, தலைவர்கள் எல்லாம் மாளிகைகளை உள்பக்கமாக சாத்திக் கொண்டு விட்டார்கள். அநீதிகளுக்கு எதிராக அணி திரட்ட, வழி நடத்த, ஒன்று சேர்க்க முடியாத அத்தனை தலைவர்களுக்கும் குற்ற உணர்வை கொடுக்கும் விதமாக இதன் களம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த "மெர்சல்' பட பாணியில் வசனங்கள் இருக்கும்'' என்றார் வாராகி.