சமீபத்திய இசையமைப்பாளர்களில் கவனம் தொடுகிறார் சபீர். 'சகா', "தில்லுக்கு துட்டு 2' என அடுத்தடுத்து வந்த இரு படங்களின் இசையிலும் தனித்துவம் அடைந்திருக்கிறார். தனது அறிமுகம் குறித்து அவர் பேசும் போது... இங்கே திருவண்ணாமலைதான் எனக்கு பூர்வீகம். அப்பாவுக்கு திருவண்ணாமலை. அம்மாவுக்கு சிங்கப்பூர். எல்லோருமே சிங்கப்பூரில் தஞ்சம்.
சிறு வயதில் இருந்தே பாடல்கள் எழுதுவதிலும், இசையமைப்பதிலும் ஆர்வம் உண்டு. நானே ஒரு மெட்டுக்குள் வார்த்தைகள் விட்டு, பாடலை வடிவமைப்பேன். அது நண்பர்களின் வட்டாரத்தில் பாராட்டுக்கள் பெறும், அந்த உந்துதல்தான் இங்கு என்னை அழைத்து வந்திருக்கிறது. சகா நல்ல அறிமுகம் தந்திருக்கிறது. இசை மட்டுமில்லாமல், பாடல் எழுதியும் இருக்கிறேன். "யாயும்..' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "தில்லுக்கு துட்டு 2' இதுவும் நல்ல முறையில் சென்று சேர்ந்திருக்கிறது. உணர்வுகளை இதயத்துக்குள் கடத்துவதுதான் இசையின் வேலை. இந்த இரண்டுப் படங்களிலும் அது நன்றாகவே நடந்திருப்பதாக உணர்ந்தேன். இரண்டுப் படங்களுமே நிறைய ரசிகர்களை எனக்குக் கொண்டுவந்துள்ளது. வாய்ப்பு தந்தவர்களுக்கு நன்றி. நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தொட்டு விட்டார்கள். அலைகடலும் ஆழ்கடலும் அவர்கள் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும். இருந்தாலும் அவர்கள் தொடாமல் விட்ட ட்யூன்களைப் பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும்'' என்கிறார் சபீர்.