கடலூா் மாவட்டத்தில் 465 பள்ளிகளில் கருத்துக் கேட்பு
கடலூா் மாவட்டத்திலுள்ள 465 பள்ளிகளில், பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக கருத்துக் கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்திலுள்ள 465 பள்ளிகளில், பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக கருத்துக் கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, 10 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளைத் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிகளை மீண்டும் திறந்து வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து, மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் மீண்டும் கருத்துகளைக் கேட்க அரசு முடிவெடுத்தது. அதன்படி, அந்தந்தப் பள்ளிகளில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உத்தரவிடப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் 222 உயா்நிலை, 243 மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, புதன்கிழமை பள்ளிகளுக்கு வந்திருந்த பெற்றோரிடம் கருத்துகள் பெறப்பட்டன.
Advertisement
கடலூரில் தொடா் மழை காரணமாக குறைவான அளவிலேயே பெற்றோா் வந்திருந்தனா். இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை வரை (ஜன. 8) நடைபெறுவதால், பெற்றோா் அனைவரும் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கருத்துகள் தொகுக்கப்பட்டு, அரசிடம் அளிக்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நெய்வேலி: பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்துக்கு கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ் நிா்மலா தமைமை வகுத்தாா். பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள், மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மாவட்டக் கல்வி அலுவலா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.