குப்பைத் தொட்டிகளாகிவிட்ட ஏரிகள்!
சிறிய குடும்பமாக இருந்தாலும் சரி, பெரிய நாடாக இருந்தாலும் சரி, அதன் முன்னேற்றத்துக்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று இருக்கிற வளங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், மற்றொன்று புதிய வளங்களை உருவாக்குத
சிறிய குடும்பமாக இருந்தாலும் சரி, பெரிய நாடாக இருந்தாலும் சரி, அதன் முன்னேற்றத்துக்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று இருக்கிற வளங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், மற்றொன்று புதிய வளங்களை உருவாக்குதல். இந்த இரண்டிலும் சிறப்பாக உள்ள குடும்பமும், நாடும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும்.
ஆனால், நீர் ஆதாரங்கள் பற்றிய விஷயத்தில் இவ்விரண்டு வழிகளையும் பின்பற்றத் தவறி வருகிறோம். அதனால் தண்ணீருக்காகக் குழாயடியில் தொடங்கி அண்டை மாநிலங்கள் வரை சண்டை, சச்சரவுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.
தண்ணீருக்காக இன்னொரு உலக யுத்தம் நடந்தால்கூட வியப்பதற்கில்லை. அரசின் கொள்கைப்படி நாள்தோறும் தனிமனிதனுக்குத் தேவை என நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர்கூடக் கிடைப்பதில்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் இன்று மனிதனுக்குப் போதுமான தண்ணீரோ, சுத்தமான தண்ணீரோ கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இந்தியாவில் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் மக்கள்தொகை அதிகரித்து வருதல், தனிநபர் தண்ணீர் இருப்பும், தரமும் குறைந்துவருவது, நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது என பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
1951-ம் ஆண்டு தனிநபர் தண்ணீர் இருப்பு 5,177 கனமீட்டராக இருந்தது. மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றால் தண்ணீர் இருப்பு 1,650 கன மீட்டராகக் குறைந்துவிட்டது.
தனிநபர் தண்ணீர் இருப்புக் குறைந்ததுடன் சுத்தமான தண்ணீரும் அரிதாகி வருகிறது. முன்பு சுத்தமான தண்ணீர் தடையின்றிக் கிடைத்ததால் நோய் நொடி அதிகமின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று அதிகப்படியான நோய்களுக்குக் குடிநீரே காரணமாகிறது.
அப்படியே அசுத்தமான தண்ணீர் என்றாலும், அதுவும் பற்றாக்குறையின்றிக் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் இருந்துவரும் நமது அலட்சியப்போக்குதான்.
நம் முன்னோர்கள் வீடுகள் கட்டும்போதுகூட முன்யோசனையுடன் மழைநீர் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். பெரிய அளவிலான வீடுகளின் உள்பகுதியில் உள்ள தொட்டிபோன்ற அமைப்பில் மழைநீர் கொட்டும் அமைப்புடன் வீடுகள் கட்டினர். அப்போது நிலத்தடி நீர்மட்டம் குறையாததற்கு இதுவும் ஒரு காரணமாகும். பின்னாளில் இவ்வமைப்பு மழைநீர் சேகரிப்புத் தொட்டி என்றானது.
ஆனால், இத்தகைய அமைப்புகள் கொண்ட வீடுகள் இன்று குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்தாலும் பெருமளவில் குறைந்துவிட்டது. அவற்றைப் பராமரிப்பதில் ஏற்பட்ட இடர்பாடுகளாலும், அவை சிதிலமடைந்து போனதாலும் இவ்வமைப்புடன் கூடிய வீடுகள் இன்று அரிதாகிவிட்டன.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் பெயரளவுக்கு அமைக்கப்பட்டதாலும், தொடர்ந்து பராமரிக்கப்படாததாலும் சிதிலமடைந்தும், குப்பைத் தொட்டியாகவும் மாறிவிட்டன.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான கிராமங்களுக்கு ஏரிகளே நீர்நிலை ஆதாரங்களாக இருந்துவந்தன. ஏரிகளின் தண்ணீர் குடிநீராக மட்டுமன்றி, மற்ற பயன்பாடுகளுக்கும் உதவியது.
ஆனால், காலப்போக்கில் கவனம் செலுத்தாததால் ஏரிகள் பரப்பளவில் குறைந்தும், பராமரிப்பு இல்லாமலும் போய்விட்டது. இதனால் ஏரிகள் என்பது மழை பெய்தால் நீர் தேங்கி நிற்கும் குட்டையாகவும், கிராமத்தின் குப்பைகள் கொட்டும் தொட்டியாகவும் மாறிவிட்டது.
கிராமங்களுக்கு அடையாளமாக விளங்கி வந்த சிறிய, பெரிய ஏரிகள் காணாமற் போய்விட்டன. ஏனெனில், கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை சிறிய, பெரிய அளவிலான திட்டங்கள் கொண்டு வரப்படும்போது முதலில் ஏரிகளே ஆக்கிரமிக்கப்படுகின்றன.
உதாரணமாக, பெரும்பாலான அரசு அலுவலகக் கட்டடங்கள், பஸ் நிலையங்கள், மின் திட்டங்கள் போன்றவை ஏரிகளைத் தூர்த்துக் கட்டப்படுகின்றன. இப்படி அரசால் ஆக்கிரமிக்கப்படுவது மட்டுமன்றி, தனிமனித நடவடிக்கையாலும் ஏரிகள் பரப்பளவில் குறைந்தும், மறைந்தும் போய்விட்டன. கிராமங்களுக்கு அருகில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாக மாறி வருகின்றன.
நமது முன்னோர்கள் கிராமங்களில் கோயில் கட்டியதுடன் அதன் அருகிலேயே கோயில் குளம் என்ற பெயரில் குளங்களை வெட்டினர். அந்தக் குளங்கள் கிராம மக்களுக்குப் பயனளித்ததுடன், நீர் தேங்கி நிற்கும்போது ஏரியைச் சுற்றியுள்ள கிணறுகள் யாவும் நீர்வளம் கொண்டதாகவும் இருந்தன.
ஆனால், காலப்போக்கில் கோயில் குளங்கள் யாவும் சரியான பராமரிப்பின்றி செடி, கொடிகள், மரங்களுடன் பரிதாபமாகக் காட்சி தருகின்றன. பெரும்பாலான கோயில்களில் குளம் என்பது குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது. இத்தகைய கோயில் குளங்களுக்குப் புனிதத்தன்மை இருப்பதாகக் கருதப்படுவதால் அவை மட்டும் ஆக்கிரமிக்கப்படவில்லை.
கிராமங்களில் வனப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அருகில் உள்ள நில உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை நிலை. அவ்வப்போது அரசின் அவசர நடவடிக்கைகளால் ஏரிகள் அதன் உருவிலேயே காட்சியளித்தாலும் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
இதனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஏரிகளைத் தவிர, அதிகப்படியான ஏரிகள் பாசனத்துக்குப் பயன்தராத நிலையிலேயே உள்ளன. ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கையால் பெரும்பாலான ஏரிகளுக்குத் தண்ணீர் வரத்து என்பதே இல்லாமல் போய்விட்டது.
மழைபெய்த பின்னர் ஏரிகள் மற்றும் குளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் கொண்டே மழை எந்த அளவுக்குப் பெய்துள்ளது என கணிக்கப்பட்டது. ஆனால், ஏரிகளுக்கான தண்ணீர் வரத்துக்கான பாதைகள் அடைபட்டுவிட்டதால் மழைநீர் மட்டுமே நீராதாரமாக உள்ளது.
நகரங்களில் அதிகப்பரப்பு கொண்ட ஏரிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக இருந்தது. அதாவது மழைக்காலத்தில் ஓர் ஏரி நிரம்பியவுடன் நீர் வீணாகாமல் மற்றொரு ஏரிக்குச் செல்வதற்கு வழிவகை இருந்தது. ஆனால், நகரின் பரப்பு விரிவடைந்ததால் இவ்வழிகள் யாவும் கட்டடங்களாக மாறிவிட்டன.
இதனால் ஓர் ஏரி நிரம்பிய பின்னர் மேலும் வரக்கூடிய தண்ணீர் வீணாகச் சாக்கடையில் கலந்துவிடுகிறது. இந்நிலைதான் கிராமங்களிலும் உள்ளது. மழைக்காலங்களில் விளைநிலங்கள் வழியாக ஏரிகளுக்குத் தண்ணீர் வருவதற்கான வழிகள் இருந்தன. ஆனால், நீர்வரத்துக்கான வழிகள் யாவும் கட்டடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறியதால் அதற்கான வழிகள் அடைபட்டுவிட்டன.
ஏரிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறும்நிலை இருந்தும் கோடைகாலங்களில் பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், முறையான பராமரிப்பும், பயன்பாடும் இல்லாதது மற்றொரு புறம் என்ற நிலையில்தான் ஏரிகள் உள்ளன.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குளங்களும், 3,936 நடுத்தர ஏரிகளும், பொதுப்பணித்துறை நிர்வாகத்தின்கீழ் 5,276 குளங்களும், நதிநீர் பெறும் குளங்கள் 3,627-ம், 9,886 ஏரிகளும் உள்ளன.
இவைகளில் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் யாவும் அதற்கே உரிய பரப்பளவுடன் இருக்கிறதா என்பதே சந்தேகமான ஒன்றாகும்.
தமிழகத்தில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகாமல் இருக்கும்பட்சத்தில் மழைக்காலத்தின்போது தண்ணீர் தேங்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் தண்ணீர்த் தேவையும் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், பெருமளவிலான குளங்கள் சுருங்கியதுடன் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் சுமார் 30 சதவீத குளங்கள் நீரைத் தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெரும்பாலான ஏரிகள் குப்பைத்தொட்டிகளாக மாறியதுதான் காரணம்.
உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் குளங்கள் இருந்தாலும் அவைகள் ஆக்கிரமிக்கப்படும்போது, அதை அகற்றுவதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இல்லை.
இதனால் ஏரிகளோ, குளங்களோ ஆக்கிரமிப்பு செய்யப்படும்போது புகார் தெரிவிக்கும் அமைப்பாக மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக் காலதாமதமாவதால் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன.
நம் நாட்டின் ஒட்டுமொத்த தண்ணீர் பயன்பாட்டில் 83 சதவீதம் நீர்ப்பாசனத்துக்காகவும், மீதமுள்ளவை வீடுகள், தொழிற்சாலை உள்ளிட்ட பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக நீர்வள மேம்பாட்டுக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.
நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் சிக்கனப் போக்கும், சிறப்பாகப் பயன்படுத்தும் வழக்கமும் மேம்படுமாயின் 2050-ம் ஆண்டில் அதிகபட்ச தண்ணீர்த் தேவை ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி கனமீட்டராக இருக்கும் என இந்த ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
இத்தகைய சூழலில், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்த அரசு மீண்டும் அமைந்திருப்பதால் இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எதிர்காலத் தண்ணீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள ஏரிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பதுடன் அவைகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.