அன்பு செலுத்த உறுதி ஏற்போம்
மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குடும்ப பிரச்னைகள், நம்பி ஏமாற்றப்படுதல், தவறான சேர்க்கை, தொடர்ந்த போதைப் பழக்கம் போன்றவையே ஒரு மனிதன் மனநோயாளியாக மாறக் காரணமாகின்றன.
மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குடும்ப பிரச்னைகள், நம்பி ஏமாற்றப்படுதல், தவறான சேர்க்கை, தொடர்ந்த போதைப் பழக்கம் போன்றவையே ஒரு மனிதன் மனநோயாளியாக மாறக் காரணமாகின்றன.
நம் நாட்டில் மூன்று சதவீதம் பேர் முழுமையான மனநோயாலும் 10 முதல் 15 சதவீதம் பேர் ஆரம்பக்கட்ட மனநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 65 லட்சம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டில், உலகின் இரண்டாவது பெரிய நோயாக மனநோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு காரியத்தையும் மனஉறுதியுடன் கையாண்டால் வெற்றி எளிதில் கிடைக்கிறது. மனமில்லாமல் செய்யும் காரியம் தோல்வியில் முடிகிறது. ஆக மனம் மனித வாழ்க்கை முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை அவர்கள் குடும்பத்தினர் பெரும்பாலும் அரவணைப்பதில்லை. மாறாக வெறுத்து ஒதுக்குகின்றனர். அவர்களின் நிலையுணர்ந்து உரிய காலத்தில் சிகிச்சைக்கு கூட்டிச் செல்வதே இல்லை.
இதனால் நாள் செல்லச் செல்ல நோய் முற்றி விடுகிறது. சாலைகளில் துணிகளை கிழித்துக்கொண்டு அலங்கோலமாக திரியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் இரு துருவங்களாக உள்ளன. எப்போதும் ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இன்பம் வந்தால் சிரித்து மகிழ்வதுபோல் துன்பம் வரும் நேரத்தில் அதனைத் தாங்கிக்கொள்ளும் மன தைரியமும் வரவேண்டும்.
அத்தகைய மன தைரியத்தை குழந்தைகளுக்கு சிறுவயது முதலே பெற்றோர் ஊட்டுவது அவசியம். தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக மட்டுமல்லாமல் தோல்விகளை தாங்கவும் கெட்ட பழக்க வழங்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவர்கள் அறியுமாறு செய்ய வேண்டும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, குடும்பத்தினரே வெறுத்து ஒதுக்கும் நிலை மிகவும் வருந்தத்தக்கது. சிலர் அவர்களை, ரயில், பஸ்களில் ஏற்றிச் சென்று சுற்றுலாத் தலம், கோவில் போன்ற இடங்களில் விட்டு விட்டுச் செல்கின்றனர்.
இதனால்தான் சுற்றுலாப் பகுதிகளில் மனநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
மனநோய் வராமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. நடந்து முடிந்துபோன ஒரு சம்பவத்தை, தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருத்தல், மனதை வெகுவாகப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
மேலும் எப்போதும் உற்சாகமாக இருப்பது, நல்ல தூக்கம், உடல்நலத்தை எப்போதும் ஒரே சீராக வைத்துக்கொள்வது ஆகியவை மனநலம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் காரணிகள் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, மனதை ஒருமுகப்படுத்திடும் முயற்சிகளை உருவாக்கி உடலில் நோயின்றி வாழ்ந்து மனநோய் வாராது காத்துக்கொள்ளவும் மனநலம் பாதிக்கப்பட்டோரிடம் அன்பு செலுத்தவும் இந்த (உலக மனநல) நாளில் நாம் உறுதி ஏற்போம்.