முகப்பு
கட்டுரைகள்

எல்லாருமே ஏழைகளா?

நாட்டின் நலன் கருதி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெற விருப்பம் இல்லாதவர்கள், எரிவாயு நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட விற்பனை முகவரிடமோ தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:39 AM
பகிர்:

நாட்டின் நலன் கருதி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெற விருப்பம் இல்லாதவர்கள், எரிவாயு நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட விற்பனை முகவரிடமோ தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இதுதொடர்பாக நுகர்வோருக்கு குறுந்தகவல்கள் மூலமாக அறிவிப்பும் விடுக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியிடப்பட்டும் இதுவரை சில ஆயிரம் பேர்தான் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

"ஆண்டுதோறும் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்தான் வழங்கப்படும். அதற்கு மேல் சிலிண்டர்கள் தேவைப்படுவோர் சந்தை விலையில் (மானிய விலையை விட கூடுதலாக ரூ.540) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்' என முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துணிச்சலாக அறிவித்திருந்தது.

இதன் காரணமாக ஏழை, நடுத்தரக் குடும்பத்தினர் தங்களது மாதாந்திர வரவு - செலவில் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிலிண்டர் பயன்பாட்டை ஓரளவு குறைத்தனர்.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற நோக்கத்தில்தான் மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

பரம ஏழைக்கும் சரி, கோடீஸ்வரனுக்கும் சரி சிலிண்டர் வழங்குவதிலும், விலையிலும் இதுவரை பாரபட்சம் இல்லை. ஆனால், இந்நிலை இனியும் தொடரக் கூடாது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இந்தியாவில், தானாக முன்வந்து மானிய விலையில் சிலிண்டர்கள் வேண்டாம் என்று கூறுவோர் ஆயிரக்கணக்கானோர்தானா?

இத்தனை நாள்கள் அனுபவித்த சலுகைகளை விடுவதற்கு தயக்கம் ஏன்? இவர்கள் தானாக முன்வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்து இருக்க வேண்டும் அல்லவா?

குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு கெடுவிதிக்க வேண்டும். அதன் பிறகும் பதிவு செய்யாத உயர்ரகப் பிரிவினரைக் கண்டறிந்து அவர்கள் பெயர்களை மானியப் பிரிவினர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.

சாமானியனுக்குத்தான் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியம், இலவசம் ஆகியவற்றை உயர்ரகப் பிரிவினருக்கும் வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

மானிய விலையிலான சிலிண்டர்கள் பெற விரும்பாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பா.ஜ.க. அரசு அறிவித்து சில நாள்களாகியும் இதற்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில், துணிச்சலான மற்றொரு நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், பெரும் செல்வந்தர்கள், மத்திய, மாநில, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் முக்கிய அலுவலர்கள் மானிய விலையிலான சிலிண்டர்களை ரத்து செய்ய வேண்டும்.

இந்த நடைமுறையில் ஏதேனும் சிரமமிருந்தால், சிலிண்டர் விநியோக நிறுவனங்களின் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு விவரப் படிவங்களை அளித்து பூர்த்தி செய்துத் தருமாறு கோர வேண்டும்.

இந்தப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி, உயர்ரகப் பிரிவினரைக் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் பட்டியலை வருமானவரித் துறை வாயிலாகப் பெற்வது எளிது.

இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்படும். இதன்மூலம் நாட்டுக்குத் தேவையான பல்வேறு நலத் திட்ட உதவிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளலாம்.

"உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன்' என்று கூறும் அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நாட்டுக்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டால், அவர்களைப் பலரும் பின் தொடருவார்கள்.

இதேநேரத்தில் ஏழை, நடுத்தர மக்களை வகைப் பிரித்து மானிய சிலிண்டர்களை இன்னமும் அதிகரிக்கவும் செய்யலாம்.

வீட்டு உபயோக சிலிண்டர்களை வர்த்தக நோக்கில் ஹோட்டல்கள், நிறுவனங்களில் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நகரத்திலும் இதற்கான குழுவை அமைத்து, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.