கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று போக சாகுபடி செய்து வந்த தமிழகம், கர்நாடகத்தின் பிடிவாத போக்கால் ஒரு போக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டாவை பொருத்தவரை தற்போது சுமார் 16 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு உள்ளது.
கர்நாடகம் தற்போது காவிரியில் மேக்கேதாட் பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டப் போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பால் தமிழகம் மீண்டும் தண்ணீருக்காக போராட வேண்டிய நிலையில் உள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.
நீர் மின் திட்டங்களை செயல்படுத்த மேக்கேதாட்டுவில் மூன்று அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவால் தமிழக - கர்நாடக உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 1934-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை காவிரி ஒட்டுமொத்த நீரோட்டத்தில் மாநிலங்களின் பயன்பாட்டு அளவு சராசரி:
தமிழ்நாடு - புதுவை உள்பட பரப்பளவு 28.21 லட்சம் ஏக்கருக்கு பயன்படுத்திய நீர் 555 டி.எம்.சி. கர்நாடகத்தில் பயிர் செய்யப்பட்ட 5.23 லட்சம் ஏக்கருக்கு பயன்படுத்திய நீரின் அளவு 177 டி.எம்.சி. கேரளம் பயிர் செய்த பரப்பளவு 0.53 ஏக்கர், பயன்படுத்திய நீர் 5 டி.எம்.சி.
நடுவர் மன்றத்திடம் கோரிய நீர் விவரம்: தமிழ்நாடு 29.26 லட்சம் ஏக்கருக்கு 562 டி.எம்.சி. தண்ணீர் கோரியது. கர்நாடகம் 27.28 லட்சம் ஏக்கருக்கு 464 டி.எம்.சி. தண்ணீர் கோரியது.
அப்போது நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 24.71 லட்சம் ஏக்கருக்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகத்துக்கு 18.85 லட்சம் ஏக்கருக்கு 270 டி.எம்.சி. தண்ணீரும் பகிர்ந்தளிக்க வேண்டும் என இறுதி தீர்ப்பளித்தது.
ஆனால், இதுவரை கர்நாடக அரசு அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை.விளைவு? கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு குறைந்து தற்போது 16 லட்சம் ஏக்கராக குறைந்தது.
இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு - காவிரி டெல்டா மாவட்டங்களின் பொதுச் செயலர், ஆறுபாதி ப. கல்யாணம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலம் காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு இழைத்து வரும் அநீதிகள் சொல்லி மாளாதவை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மாநில அரசுகளின் அதிகார வரம்புகளை, பல முறைகள் மீறியும், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் இவைகளின் தீர்ப்புகளை அமல்படுத்த மறுத்தும், தாமதித்தும் நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி வருகிறது கர்நாடகம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்ற கூற்று காவிரி பிரச்னையில் நூறு சதம் உண்மையாகிவிட்டது.
காவிரி பிரச்னையில் மத்திய அரசு முன்னிலையில் தமிழகம் - கர்நாடகம் பேச்சுவார்த்தை தொடங்கிய ஆண்டு 1968. மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பித்த ஆண்டு 1990.
இடைப்பட்ட 22 ஆண்டு காலத்தில் கர்நாடகம் தனது மாநிலத்தில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த காவிரி நீரை தேக்க, பயன்படுத்த திட்டங்களை அமல்படுத்தியது.
நாட்டின் எந்த ஒரு நதிநீர் பிரச்னையிலும் இவ்வளவு காலதாமதத்தை எந்த மத்திய அரசும் செய்தது கிடையாது. காவிரி நடுவர் மன்றம் ஜூன் 1991-இல் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இது டிசம்பர் 1991-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதை நிறைவேற்ற முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அரசு அளித்த சுய அதிகாரம் கொண்ட ஆணைய வரைவறிக்கையை கர்நாடகம் ஏற்க மறுத்து இறுதியில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 1998-இல் அப்போதயை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் பின்னர் பிப்ரவரி 2007-இல் இறுதி தீர்ப்பு வழங்கியது.
இந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் பிப்ரவரி 2013-இல் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு உண்மையில் தமிழகத்தின் தொன்மையான காவிரி உரிமைகள் பெரும்பாலானவற்றை பறித்து விட்டது.
40 ஆண்டு கால தாமதத்தால் தமிழகம் பெருமளவில் காவிரி நீர் ஆதாரத்தை இழந்துவிட்டது. மத்தியில் ஆட்சிகள் மாறினாலும், காட்சி மாறவில்லை.
மத்தியில் ஆண்ட கட்சிகள் பாரபட்சம் காட்டி தங்களது அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. கர்நாடகம் தற்போது தனது மாநிலத்தில் உற்பத்தியாகும் மொத்த நீரையும் ஆக்கிரமிக்க நினைத்து மேக்கேதாட்டுவில் அணைகளை கட்ட முனைகிறது.
இதை மத்திய அரசு உடனே தடுக்க வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்க முயலும் கர்நாடகத்தின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.