முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

காற்றைக் காப்போம்!

இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசு என்பது ஒரு நிரந்தர பிரச்னையாக இருந்து வருகிறது.

Updated On : 10 ஏப்ரல், 2017 at 1:54 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:45 PM

இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசு என்பது ஒரு நிரந்தர பிரச்னையாக இருந்து வருகிறது. அது மனிதனின் உடல் நலன், உணவு உற்பத்தி, சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பெருமளவில் பாதிப்படையச் செய்கின்றன. கடந்த ஐந்து வருடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு சர்வதேச அளவில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கு பசிபிக் நாடுகள் போன்றவைதான் அதிக மாசுபாடுடைய நாடுகளாகவும், அதிலும் குறிப்பாக உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவு காற்று மாசுபாடு கொண்டவை என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
பெருகி வரும் வாகனங்கள், மின் நிலையங்கள், எரிபொருள் உற்பத்தி ஆகிய
வற்றால் காசு மாசுபாடு அதிகரித்து வருகிறது. நகர வளர்ச்சிக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் மரங்களை வெட்டு
வதால் நச்சு வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலக்கின்றன.
இயற்கைத் தாயின் உறைவிடமான கிராமங்களில், மரங்கள், ஏரிகள், குளங்கள், ஊருணிகள் முதலியவற்றை அழித்தல், தொழிற்மயம் மற்றும் நகரமயமாதல், பசுமை நிறைந்த விளை நிலங்கள் விலை நிலங்களாகி வானளாவிய கட்டடங்களைக் கட்டுதல் போன்றவற்றால் காற்று மண்டலம் மாசு மண்டலமாகி வருகிறது.
தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ûஸடும், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரே கார்பன், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ûஸடு, உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் முதலியவை காற்றை மாசுபடுத்துகின்றன.
அத்துடன், இவை சூரிய கதிர்களுடன் இணைந்து ஒளி வேதி நச்சுப்புகை படலத்தை ஏற்படுத்துகின்றன. அத்துடன் வாயு மண்டலத்தில் அமில தன்மையை ஏற்படுத்தி, அமில மழை உருவாகக் காரணமாகி நிலத்தடி நீரை மாசடையச் செய்கின்றன.
இந்தியாவில் 1951-ஆம் ஆண்டில் 30 லட்சம் வாகனங்கள் இருந்தன. அது 2011-ஆம் ஆண்டில் 5.83 கோடியாக அதிகரித்து தற்போது மும்மடங்கு அதிகரித்துள்ளது. வாகனங்கள் வெளியிடும் நச்சு தன்மையுள்ள புகை காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக விளங்குகின்றது.
ஒரு வருடத்தில் ஒரு வாகனத்திலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ûஸடின் அளவு 1.92 டன். இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்ûஸடின் அளவு 8,000 கிராம். இதனால் 70 சதவீத காற்று மாசுபாடு ஏற்படுகிறது.
தனி நபர் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் 2001-02ஆம் ஆண்டு 75.7 சதவீதமாக இருந்த பொதுப் போக்குவரத்து பயன்பாடு 2030-31ஆம் ஆண்டு 45 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் காற்று மாசுபாடு அடைந்த 10 நகரங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன. சர்வதேச அளவில் காற்று மாசுபாட்டால் மிக அபாய கட்டத்தில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 3,000. இந்திய நகரங்களில் சரிபாதி காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
சீனாவில் காற்று மாசு என்பது எல்லை மீறி சென்றுவிட்டது. முகமூடி அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை சீன நகரங்களில் உள்ளன. சீனாவின் மொத்த தேசிய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி காற்று மாசுபடுவதால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கவே பயன்படுகிறது. அங்கு 3 லிட்டர் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 32 டாலர். அதாவது, இந்திய மதிப்பில் 2,100 ரூபாய்.
சீனாவில் காற்றில் கலக்கும் மாசின் அளவானது பாதுகாப்புக்கு உட்பட்டதைவிட 20 மடங்கு அதிகம். இதனால், ஆண்டுக்கு அங்கு 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கின்றனர். பெய்ஜிங் காற்றை சுவாசிப்பது ஒரு நாளை 21 சிகரெட்டை பிடிப்பதற்கு சமம் என்று கூறுகின்றனர்.
காற்றில் காணப்படும் நுண்ணிய நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. பொது மக்களுக்கு நாள்தோறும் காற்றின் தரம் குறித்து அறிவிக்கவும், மாசுபாடு குறித்து தெரிந்து கொள்வதற்கும் 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு காற்றின் தரக் குறியீட்டை வெளியிட்டது.
காற்று மாசுபாட்டை குறைக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் காற்றை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரைச்சலைக் குறைத்து நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ûஸடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை தருகிறது.
கருவேல மரங்கள் காற்று மாசுபாட்டின் நண்பன். காற்று மாசுபாட்டை குறைக்க கருவேல மரங்களை அழித்து விட வேண்டும். கருவேல மரங்கள் தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகின்றன. அதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் வறட்சி ஏற்படும்.
கூடுமான வரையில் பொது வாகனங்களில் பயணிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதனால், எரிபொருள் சிக்கனம் ஏற்படுவதுடன், தூய்மைக் கேடும், சாலை நெரிசலும் பெருமளவு குறைக்கும். காற்று மாசு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக் கூடாது.
காற்று மாசு குறித்து, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம். பெருகி வரும் மாசுபாட்டால் இந்தத் தலைமுறை மட்டுமல்ல எதிர்வரும் தலைமுறையும் பாதிப்புக்குள்ளாகும்.
இன்று காற்று மாசுபாட்டால் தில்லிக்கு வந்த நிலைமை மற்ற நகரங்களுக்கும் வந்தால் இந்தியப் பொருளாதாரம் பெருமளவில் பாதிப்படையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.