முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

நேர்மை உறங்குவதில்லை

குஜராத் மாநிலம், போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ராஜ்காட்டில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். படிப்பில் அவர் மத்திய தர மாணவராகவே விளங்கினார்.

Updated On : 11 செப்டம்பர், 2017 at 2:50 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:21 PM

குஜராத் மாநிலம், போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ராஜ்காட்டில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். படிப்பில் அவர் மத்திய தர மாணவராகவே விளங்கினார். யாருடனும் சரியாக பழகாதவராகவும், வெட்கம் நிறைந்தவராகவும் அவர் இருந்தார்.
ஒரு முறை அவர் படித்த பள்ளிக்கு ஆங்கிலேயே கல்வி அதிகாரி பள்ளியை ஆய்வுச் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களின் அறிவுத் திறனை சோதனைச் செய்தார்.
மோகன்தாஸ் படிக்கும் வகுப்புக்கும் அந்த அதிகாரி வந்து ஐந்து வார்த்தைகளைச் சொல்லி மாணவர்களை எழுதுமாறு கூறினார். அந்த வார்த்தைகளில் ஒன்று "கெட்டில்' என்பதாகும்.
அதனை மோகன்தாஸ் தவறாக எழுதினார். அப்போது அங்கே வந்த வகுப்பு ஆசிரியர், மோகன்தாஸ் தவறாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி அவரது கால்களை அழுத்தினார். ஆனாலும், மோகன்தாஸ் அதைப் பொருட்படுத்தவில்லை.
காப்பி அடித்து எழுதுவது தவறு என்று மோகன்தாஸ் எண்ணினார். "கெட்டில்' என்ற வார்த்தையை அவரைத் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் சரியாக எழுதியிருந்தார்கள்.
அந்த அதிகாரி மோகன்தாûஸ குறை சொல்லாமல் "கெட்டில்' ஸ்பெல்லிங்கை சரியாக எழுதிக் காட்டி திருத்தினார். அந்த அதிகாரி சென்ற பிறகு மோகன்தாûஸ ஆசிரியர் கடிந்துக் கொண்டாலும், அவரது நேர்மையை பாராட்டி வாழ்த்தினார்.
காந்தி தமது ஆசிரியரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் வைத்திருந்தார்.
மோகன்தாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி அவரது பிற்கால வாழ்விற்கு அடித்தளமாக அமைந்து, அரசியலில் நேர்மையையும், வாய்மையையும் அவர் தொடர்ந்து கடைபிடித்ததாலேயே தேசப் பிதாவாக மாறினார். தேவையில்லாமல் ஒன்றை நாம் வைத்திருந்தால் அதுவும் திருட்டுக்குச் சமம் என்றார் காந்திஜி.
இன்று ஒழுக்கம், நேர்மை இவற்றைக் காணுவது என்பது அரிதாகவே உள்ளது. ஒழுக்கம், நேர்மை உடையவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவதில்லை. மாறாக வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்.
பணம் கொடுத்தால் பொய் சாட்சி சொல்வது, பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, ஒரு பொய்யையே பலமுறை சொல்லி அதை உண்மையாக்குவது, சுயநலத்தோடு வாழ்வது, மனசாட்சியை கொன்று பிறர் நாணுமாறு செயல்களைச் செய்வது, வழக்குரைஞர்களே அநீதிக்காக வாதாடுவது, படித்தவர்களும், பணக்காரர்களும் பதவிக்காகவும், புகழுக்காகவும் தங்கள் கெளரவத்தை இழந்து ஈனச் செயல்களைச் செய்வது, நேர்மையற்ற தீயவர்கள் வைப்பதே சட்டம் என்பது அதிகரித்து வருவது போன்றவை நல்ல சமுதாயத்திற்கு அடையாளமல்ல.
தீய செயல்கள் செய்பவர்களிடையே இருக்கும் ஒற்றுமை நேர்மையானவர்களிடம் காணப்படுவதில்லை. காரணம், நேர்மையானவர்கள் சிலராகி, நேர்மையற்றவர்கள் பலராகி விட்டதுதான்.
இத்தகையவர்களுக்குத்தான் சமுதாயத்தில் பயம் கலந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. இதனால், நேர்மையான எண்ணம் கொண்டவர்கள் பயந்து விலகி விடுகிறார்கள். நல்லவர்கள் தீமையை எதிர்த்து சண்டையிடுவது அரிது.
ஏனெனில் அதனால் வெற்றியைவிட அவர்களுக்கு அவமானம்தான் மிஞ்சும். நேர்மையானவர்களுகே நெருக்கடி, அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது. இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.
இவ்வாறு நேர்மை உறங்கும்போது அநியாயம் விழித்தெழும் என்பது தான் காலம் காட்டும் உண்மை. ஆனால், இன்றும் நேர்மை உறங்கவில்லை என்பதை சமீபத்தில் குஜராத் மாநிலம், சூரத்தில் நடந்த சம்பவம் நினைவுப்படுத்துகிறது.
சூரத் நகரைச் சேர்ந்த ஃபுல்சந்த் என்
பவர் சாதாரண காவலாளி. இவரது மகன் சிறுவன் விஷால். இவர்களது குடும்பம் மிகவும் வறுமை வாடியது.
குஜராத்தைச் சேர்ந்தவர் மன்சுக்பாய் சவாலியா. வைர வியாபாரத்தில் இடைத் தரகராகச் செயல்பட்டு வரும் இவர் சூரத் நகருக்கு பணி நிமித்தமாகச் சென்றார். வர்த்தகர் ஒருவரிடமிருந்து வைரக் கற்களை அவர் வாங்கி வந்தபோது வழியில் ஒரு பையைத் தவற விட்டு விட்டார்.
அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷால், அதை எடுத்துச் சென்று தனது தந்தையான ஃபுல்சந்திடம் காண்பித்தான். அது விலை மதிப்பு மிக்க வைரம். அவர் நினைத்திருந்தால் அதை மறைத்து பெரிய பணக்காரராகி இருக்கலாம்.
ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் அதை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். வைரத்தைத் தொலைத்த மன்சுக்பாயும் அதை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து சோர்ந்துள்ளார். இந்நிலையில் விஷாலும், அவனது தந்தையும் சூரத் வைர வியபாரிகள் சங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் அடங்கிய பையை ஒப்படைத்தனர். அதை மன்சுக்பாயிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
சிறுவனின் நேர்மையைப் பாராட்டும் வகையில் அவனது கல்விச் செலவை ஓராண்டுக்கு சூரத் வைர வியாபாரிகள் சங்கமே ஏற்கும் என அறிவித்துள்ளது. பெற்றோர்களிடம் நேர்மை இருந்தால் தான் பிள்ளைகளிடமும் நேர்மை இருக்கும்.
வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்டதற்காக அச்சிறுவனுக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியாக வாழ வேண்டும், முன்னேற வேண்டும் என்ற விருப்பம் உடையவர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும்.
பிறர் பொருளின் மீது ஆசை கொள்ளாதவராக இருக்க வேண்டும். நேர்மையற்றவர்களின் உள்ளம் எதிர்காலத்தையே அழித்து விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.