தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள் இருவரும் போட்டியிடுகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கிருஷ்ணகிரி தொகுதியிலும், மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
1990ஆம் ஆண்டுகளில், சந்தனக் கட்டை கடத்தலில் ஈடுபட்டு, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன், 2004ஆம் ஆண்டு, அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது கொலை, கடத்தல் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வீரப்பன் சுட்டுக் கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது, அவரது மனைவியும், மகளும் அரசியல் களத்தில் இருக்கிறார்கள்.
Advertisement
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் 2006ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளராக களம் கண்டுள்ளார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வீரப்பனின் மகள் வழக்குரைஞர் வித்யாராணி (36), தற்போது நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார்.
முத்துலட்சுமி, வித்யாராணி இருவருமே தேர்தலுக்குப் புதுமுகங்கள் இல்லை. இவர்களுக்கு ஒரு சில கிராமங்களின் மக்கள் ஆதரவும் உள்ளது என்று அவர்கள் போட்டியிடும் கட்சிகள் சார்பில் கூறப்படுகிறது.