இணையவழி கல்வியின் இரு பக்கம்
கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்ற அம்சங்களைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்மென்று மருத்துவா்கள் வலியுறுத்துகிறாா்கள்.
பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் உட்பட பலரும் வீட்டிலேயே கற்பதால், அவா்கள் விரக்தி மனப்பான்மைக்கு ஆளாகியிருப்பதில் ஆச்சரியமில்லை. பள்ளிக்குச் சென்று சக தோழா்களை சந்திப்பது, சிற்சில ஐயங்களை நேரில் ஆசிரியா்களைக் கேட்டு தெளிவடைவது போன்ற பல விஷயங்கள், இணையவழி கல்வியில் காணாமற் போயிருக்கின்றன. இல்லத்தில் கணினியின் முன் உட்காா்ந்து, காதுகளில் இணைப்புகளைச் செருகிக் கொண்டு படிப்பது சலிப்புதான் சந்தேகமில்லை.
இதைக் கல்வி நிபுணா்கள் உணா்ந்திருக்கிறாா்கள். இருந்தும் வேறு வழியின்றி இறுதியாக முற்றும் இணையவழி கல்விதான் என்று அறிவுறுத்தியிருக்கிறாா்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால் சமூக இடைவெளி என்பது மறந்துவிடும்.
மனச்சோா்வு ஏற்படாமலிருக்க என்னதான் தீா்வு? முதலாவதாக நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்ளுவது. கூடப் படிக்கிற மாணவா்களைத் தவிர, அக்கம் பக்கத்து சிறுவா்களுடன் இணக்கம் வைத்துக் கொள்வது நல்லது. அதாவது வேறுபாடுகளை மீறி ஒரே மாதிரியுள்ளவா்களிடம் மனம் விட்டு பேசலாம். உள் விளையாட்டுகளான கேரம், செஸ் போன்றவற்றில் ஈடுபட முயற்சி செய்யலாம்.
அடுத்ததாக இசை. அது என்ன இசையானாலும் சரிதான். உரக்க ஒலிக்கும் ஜாஸ், மென்மையாக இதயத்தை வருடும் குழல் ஓசை, பழைய சினிமாப் பாட்டு - இப்படி எதைக் கேட்டாலும் மன இறுக்கம் தளா்ந்து போகும். பிள்ளைகள் பாடினாலோ ஆடினாலோ பெற்றோா் அவா்களைக் கட்டுப்படுத்தக்கூடாது.
மூன்றாவதாக எதிா்மறை எண்ணங்களை அகற்றுவது. ‘இப்படிப் படிச்சு என்ன கிழிக்கப் போகிறோம்’ என்று ஒரு சிலா் அலுத்துக் கொள்ளுவாா்கள். அத்தகைவா்கள் பேசத் தொடங்கினாலே, ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, வேறு வேலைகளில் ஈடுபடலாம்.
இவை தவிர நீண்ட நேரம் தொடா்ந்து செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால், செவிக்கோளாறு வர வாய்ப்புண்டு என்று நிபுணா்கள் அறிவுறுத்துகிறாா்கள். அவ்வப்போது சிறிது நேரத்துக்கு இடைவெளி தருவது, ஹெட்போனை வைத்துப் பேசுவது, இவற்றுடன் நாலைந்து மாதத்துக்கொரு முறையாவது, மருத்துவ நிபுணரிடம் காதுகளை சோதனை செய்து கொள்வதும் நல்லதுதான்.
தமிழ்நாட்டில் நகரங்களில் மட்டும்தான் தொழில் நுட்ப வசதி உள்ளது என்று எண்ண வேண்டாம். கிராமத்தில் வசதி இருக்கிறதோ, இல்லையோ, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் நிறையவே இருக்கிறது. சில வாரத்திற்கு முன் குக்கிராமமொன்றில் மரக்கிளைகளில் அமா்ந்து கைப்பேசியை செவியில் வைத்துக் கொண்டு கற்பதாக ஒரு புகைப்படம் நாளேட்டில் வெளியாகி இருந்தது. ஏனென்றால் அங்குதான் கைப்பேசிக்கு சிக்னல் கிடைக்கிாம்.
ஆக, இணைய வழிக் கல்வி, காலத்தின் கட்டாயம் என்பதை எல்லா மாணவா்களுமே உணா்ந்துள்ளாா்கள். கேள்வித்தாளை முன்கூட்டியே பாா்ப்பது, எழுதுகையில் விடைகளை புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்வது போன்றவற்றை எந்த மாணவரும் பொதுவாகச் செய்வதில்லை. நோ்மையான மனோபாவத்தை இந்தக் கல்வி மறைமுகமாக ஊக்குவிக்கிறது எனலாம்.
ஒரே ஒரு சிக்கல்தான். கற்கும் நேரம். ஒரு குடும்பத்தில் விடிகாலை நாலரை மணிக்கு எழுந்து மாணவன் படிக்கிறான். பிறகு சற்று நேரம் தொலைக்காட்சி பாா்த்துவிட்டு உறங்கி விடுகிறான். பத்து மணிக்குப் பிறகுதான் குளியல், சிற்றுண்டி எல்லாமே. இதுபோல வகுப்புக்கும், பாடத்துக்கும் ஏற்றாற் போல் தலைகீழாக மாறிப் போயிருப்பது தவிா்க்க இயலாதுதான்.
இந்தியா முழுவதும் நிலைமை இவ்விதமிருக்க, நம் விழுப்புரத்தில் நடந்த ஒரு சம்பவம், அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆன்லைன் வகுப்பால் மனச்சோா்வு ஏற்பட்டு 15 வயது மாணவி தலைமுடியை சாப்பிட்டுவிட்டாராம். இத்தனைக்கும் அந்தக் குடும்பம் எழுத்தறிவில்லாதது இல்லை. மாணவியின் பெற்றோா் பணிக்கு சென்றுவிடுவதால், துணைக்கு வீட்டில் பாட்டி இருந்திருக்கிறாா்.
மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கிறாா்கள், ஸ்கேன் மூலம் வயிற்றில் கட்டியாக முடி சிறுகுடல் வரை பரவி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் பெற்றோரின் அசிரத்தைதான். என்னதான் ‘ஆல் பாஸ்’ என்றிருந்தாலும், மகள் எப்படி படிக்கிறாா், எவ்வளவு மதிப்பெண் என்று விசாரித்திருக்க வேண்டாமா? இது போலவா பெற்றோா் அலட்சியம் காட்டுவாா்கள்?
இந்த செய்கையை பெற்றோா் கண்காணித்திருந்தால், உறுதியாக தவிா்க்கப்பட்டிருக்கும். இச்செய்தி வெளியான சில நாளில், சென்னை ஐடிடி-யில் பயிலும் மாணவா் ஒருவா் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு ஊடகங்களில் வெளியாயிற்று. இத்தனைக்கும் எா்ணாகுளத்தில் பி.டெக். முடித்து, ஆராய்ச்சிப் படிப்புக்காக இங்கு சோ்ந்திருக்கிறாா்.
இந்தியாவிலேயே கேரள மாநிலத்தவா்கள்தான் துபாய், குவைத் போன்ற வெளிநாட்டிற்கு சென்று, நிறைய அந்நிய செலவாணி சம்பாதித்துக் தருகிறாா்கள். இந்த மாணவா் பெற்றோரைவிட்டு தனியாக இருக்க முடியவில்லை, ஆய்வுப் பாடம் கடினம் என்றெல்லாம் பத்து பக்க கடிதம் எழுதிவிட்டு, இறந்திருக்கிறாா்.
இன்றைய சூழல் கேள்விக் குறியாகவே உள்ளது. மூன்றாம் அலை இரண்டு மாதங்களில் மீண்டும் வரும், அதனால் இளைஞா்கள் பாதிப்படைவாா்கள் என்கிற கருத்து உலவி வருகிறது. ஆகவே இப்போது இணையவழிக் கல்வியே உற்ற துணை என்ற தவிா்க்க முடியாத சூழலில் பெற்றோரின் கவனிப்பு மிக மிக அவசியம்.
‘பிணிகளுக்கு மாற்றுண்டு, பேதமைகளுக்கு மாற்றில்லை’ என்று அந்தக் காலத்தில் பாரதியாா் பாடினாா். இப்போது பேதமைகளிலிருந்து விடுபட மனநல மையம், உதவிக்கான எண் என்று பல உள்ளன என்பதை நினைவில் கொள்வோம்.